ஜனவரி மாதம் 13ம் தேதி பிறந்த எனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என தேடிக் கொண்டிருந்த சமயம்…

பலரும் தங்களின் மனதில் கொண்டிருந்த விருப்பமான பெயர்களை கூறினார்கள். அது மற்றுமின்றி பல வலைதளங்களும் தங்கள் விருப்பத்தை பிரதிபலித்தது.

நான் மட்டுமே பெயரை முடிவு செய்வேன், அதுவும் தமிழில் தான் வைப்பேன் என்றதும், எனக்கு தமிழை ஊட்டி வளர்த்து என்னை தமிழ்த் தாய்க்கும் மகனாக்கிய எனது தாய் சம்மதம் கூறினார். கூடவே மனைவியும் சம்மதித்தாள்.

me.jpg

இணையமே துணையாய் அலசி ஆராய்ந்து சில பெயர்களை தேர்வு செய்தாகிவிட்டது

நிறைமதி – முழுநிலவு
நறுவிழி – அழகான கண்கள்
நிலா
நித்திலா – முத்து(Pearl)
நிரல்யா – பூரணம், வரிசை (Perfect, Order)
நன்மொழி
நந்தினி – காமதேனுவின் மகள்

சில சம்ஸ்கிருத பெயர்களும்,
நிதுளா – (தெரியலப்பா)
நேத்ரா – விழிகள்

தேர்ந்தெடுத்த தமிழ் பெயர்களிலே வித்தியாசமாகவும் புதியதாகவும் இருப்பது,
நித்திலாவும், நிரல்யாவும்…

நித்திலம் என்பது நவரத்தினங்களில் ஒன்றான முத்து என்பதாகும்
நிரல் என்பது முழுமை அடைந்த அல்லது வரிசையான என்பதாகும்

பெயர்களை எல்லாம் எழுதி, இறைவன் திருவடியில் கொடுத்து, ஒன்றை மட்டும் வேண்டிக் கொண்டோம்.
இறைவனே அருளிய பெயர்: நிரல்யா

b30a3d8a66e6c45e64943d8d59700175.jpg

கவி முடத்தாமக் கண்ணியார் அவர்கள் சோழன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாய் கொண்டு அருளியது பொருநர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டுகளில் இரண்டாவது பாட்டு. அதில்,

“முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்”
–(பொருநராற்றுப்படை 113-114)

என்ற வரிகளில் நிரல் என்ற சொல், குறைபாடுகள் அல்லாத என்ற அர்த்தம் கொண்டு,

முல்லை மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முறியாத அரிசி
விரலைப்போல் நீண்ட ஒன்றோடொன்று சேராத குறைபாடற்ற சோற்றையும்”

என்று பொருள் படும்படி பாடி இருப்பார்.

Porunar_Aatrupadai

மேலும்,
அணி இலக்கணத்தில், அணிகளில் ஒன்றாக நிரல்நிறை அணி குறிப்பிடப்படுகிறது

“நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்”

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
–(திருக்குறள், 45)

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.

இங்கே நிரல் என்பது வரிசையாக என குறிப்பிடப்படுகிறது…

ஆக,

நல்ல தமிழ் பெயராகவும், புதியதாகவும் இருக்கும்படியாக நிரல்யா என்ற பெயரையே வைத்துவிட்டோம்.

நிரல்யா – முழுமையானவள் – வாழ்க வளமுடன்

(இரண்டாம் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)